April 08, 2017

காலத்தின் அசலை மனவயமாக்கும் கோணம்

யுவபாரதி மணிகண்டன் எனக்கு அறிமுகமாகி பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. மதுரை பாரதி புத்தகாலயத்தில் மற்றும் சிற்சில இடங்களில் ஹவியோடு அவரை நேசமித்த நாட்கள் நினைவில். 'நீர்வாசம்' கவிதைத் தொகுப்பும் யுவாவின் உடல் மொழியும் ஏதோ ஒருவகையில் பிணைந்திருப்பதாக ஹவியுடன் பகிர்ந்து கொண்ட ஞாபகம். அவருடைய துடிப்பு அவரின் சிறுபிராயத்தோடு இளமையோடு அலைவினோடு சம்பந்தப்பட்டிருப்பது இந்த 'மண்ணூறப் பெய்த மழை' வாசிப்பில் உறுதியானது. இரண்டு தொகுப்பின் குறியீடும் நீர் தான். பள்ளம் பார்த்தோடும் நீர் முனையின் துள்ளலை கற்பனை செய்து பாருங்கள்...யுவா அப்படித்தான் அறிமுகமானார். யுவாவின் மொழி எளிமையும் வலுவும் வாய்ந்தது. இருண்மையில் எளிமை பிரிப்பது எவ்வளவு கடினமோ சாலப்பொருத்தம் எளிமையில் வலு சேர்ப்பது. இவை இரண்டும் ஓர்மையின் பகுதியே. இவையிரண்டுமே அல்லாது ஒரு இயல்பூக்கத்தின் வழி தன் விவரணையை ஒரு இலக்கியப் பிரதியாக கதையாக நாவலாக அல்லாமல் துணுக்கு நடைச்சித்திரமாக்கியிருப்பது யுவாவின் சிறப்பு.
காலத்தைச் சித்திரமாக்குவதற்கு அசலில் நிகழ்ந்திருக்கும் சுழிவுத்தன்மைகள் தேரும் யுவா பொருளானதைப் பொருளற்றதாகவோ பொருளற்றதைப் பொருளானதாகவோ ஒரு மனித உயிரியைக் காலத்தோடு உராய்த்துவிடும் வாழ்வியல் இயக்கத்தைத் தன்னிலிருந்து அலசியுள்ளார். மனித மதகு உடையாமல் தன் நெறியை நாகரிகத்தை உருச்செய்து அவ்வுயிர் மேல் எழும்புவதற்கு பிரயத்தனம் கொள்வது உரைக்கதை.

இறந்த காலத்தின் நினைவோட்டங்களின் வழி உயிர்பிக்கும் வியர்வையும் சீழ்க்கையும் உறவும் குதூகலமும் வலியுமாக அப்பிசுபிசுப்போடு சொல்லப்படுவதால் இம்மொழி நடை வாசிப்பவரை அவரவர்களின் பால்யத்திற்குத் திரும்பிச் செல்ல அருள்கூர்ந்து பணித்து கதவைச் சாத்துகிறது. அவ்வளவு அழகாய் முட்டித்தள்ளுவது இந்நூலின் வேதிவினை. அசைபோடுதலில் சிக்கிய பின்னங்களைத் தடவித் தருவதன் மூலம் வாசிப்பாளனை பங்கேற்பாளனாகப் பிரதியாக்குவதில் வேதிவினை நிகழ்கிறது. எனது கடந்த காலங்களை யுவா மீட்டிச் சிரிக்கும் எல்லைவரை அது கடவியது. ஒவ்வொருவருடைய கடந்த காலங்களும் நிகழ் மற்றும் எதிர்காலத்தை சில பளீரிப்புகள் செய்வதை மாயாஜாலமாகக் கருதாமல் இதனை காலத்தின் தன் அலகாகக் கண்டடைவதற்குக் கொடுப்பினை பெற்றவர்கள் மிகக்குறைவு என்பதனையும் இவ்வெழுத்துச் சொல்லிச் செல்கிறது.

தன்னைத் தெளிந்து கொள்ள விழையும் தேடலே இவ்வெழுத்து. 'எங்கள் தெருவுக்குத் தொலைக்காட்சி வந்தது' என்பதில் துவங்கும் உற்சாகம், 'தனிக்கோள் துயரம்' என்பதில் வாழ்வைத் துண்டிக்கப்பட்ட பல்லி வாலாக்கிவிடுகிறது. இதற்கிடையேதான் 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டும்'. வாழ்வின் புதிரை அறிவும் அனுபவமும் கண்டடைகிறதா என்றால் அதற்கான ஆட்டமே நிகழ் என்பதாக மிஞ்சுகிறது. அம்மிஞ்சலின் குழைவோ இறப்புகளை முன்வைத்து ஒடுங்கியும் விடுகிறது. அதாவது,

1. இந்நூல் தன்னை மூன்றாகப் பகுத்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கிறது. மழலை, குடும்பம், எழுத்து. மூன்றும் தனித்தும் சமூகவயப்பட்டும் பின்னமாகிறது. அதன் லயங்கள் காலத்தை உறைய வைப்பதாக உற்சாகமாகத் திரியைத் தீண்டி சூழலில் வனப்புறுவதாக மெழுகாகிக் கரைவதாக நழுவுவதாக தளும்பாகிச் சாட்சியாவதாக அடவு பிடிக்கின்றன. நியாயமற்ற இறப்புகள் பின்னத்தை மேலும் சிக்கலாக்குகின்றன.காலத்தின் மீது வெளிச்சம் பற்றுக்கோட்டினைத் துளிர்ப்பதாக ..........அதாவது,

2.
"சூரியன் உதிக்கிறது மறைகிறது உதிக்கிறது
இலை துளிர்க்கிறது வாடுகிறது துளிர்க்கிறது
மாம்பழம் கூட ஒரு சில சீசன்களில் நன்றாகப் பழுத்திருக்கிறது 
சுழன்று சுழன்று சுற்றிவிட்டாலும் 
பம்பரம் மட்டும் ஏன் சீராக 
நிலை நின்று சுழவில்லை
திரும்பவும் சுற்றுவோம்
சூரியன் உதிக்கிறது மறைகிறது உதிக்கிறது"
(சில இடங்களில் உரைநடைக்குள் ஒளிந்திருக்கிறது கவிதை என்பதற்குமாம் மேற்கண்ட எடுத்துக்காட்டு....இந்த வடிவமும் கடைசி வரி அழுத்தமும் என்பார்வையில்....ப.25)

பாரதி நிவேதன்
தன் வரலாற்றுத்தன்மை இலக்கியப் பிரதியாக உருவெடுக்க எது அவசியமாகிறது. யாதார்த்தத்தை புனைவல்லாமல் புனைவின் ருசி எதனால் வந்தடைகிறது. வாசிப்பின் அளவில் அது இன்னொருவரின் நிகழ்வுகள் என்பதாலா. நிகழ்வுகள் அந்தளவு ஈர்ப்பா. தன் வரலாற்றின் பார்வையில் மற்றமைகள் ஒதுக்கப்பட்டுக் குறிப்பிட்ட கோணம் தேர்வு செய்யப்படுவதின் அணுகல் ருசி? இருக்கலாம். கோணம் அதன் அணுகல் தன்மை பாத்திரத்தின் தீவிரமாகிறது. யுவாவின் சுயவரலாறுத் துணுக்குகளில் தன்னுடைய பாதிப்புகளை அது நிறம் மாற்றமடையும் புள்ளியாக முன் வைக்கிறது. அது சூரியன் மற்றும் காலத்தின் முன்னுள்ள பனித்துளி. மிளிர்கிறது. ஆவியாகிறது. நீராவியின் மாற்றம் வேறு என்னவாகியிருக்கக்கூடும். மொழியாகியிருக்கிறது. மொழியின் அகம் ஒரு மிளிரலைச் செய்கிறது. மானுட வலியைத் தானும் மேய்வதாகச் சொல்கிறது.....இன்னும் சொல்லுங்கள் யுவா வாழ்த்துகள்.
வெளியீடு: பன்முகம்....விலை ;40.....2017
- பாரதி நிவேதன்
  22.03.2017

No comments: