April 08, 2017

நினைவுகளைக் கிளரும் அலைகள்...

உசிலம்பட்டியில் வசித்தாலும் தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தவர் என்பதால் நெருக்கமாகிவிட்டார் மிகவும். தோழர் விசாகனால் யுவபாரதி மணிகண்டனைக் காணும் மற்றும் அவரின் பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு. நன்றிகள் தோழர்.
எந்த இலக்கிய நிகழ்வு சென்றாலும் அன்றைய நிகழ்வு குறித்த நூல்களைப் பெற்றுத் திரும்புதல் வழக்கம். அவ்வாறே தோழர் யுவபாரதி மணிகண்டன் எழுதிய "மண்ணூறப் பெய்த மழை''யும். எங்கள் தெருவுக்குத் தொலைக்காட்சி வந்தது என்று இவர் எழுதுகிறார் என்றால் நமது தெருவிற்கு எப்போது தொலைக்காட்சி வந்தது என நம்முள் ஆயிரம் விரல்கள் தேடத்தொடங்கும் அளவுக்கு ஈர்க்கும் உரைநடை உத்தி.
சினிமாவுக்குப்போகும் யாத்திரை படித்தால் ஒரேநாளில் என் தந்தை குடும்பத்தோடு மைதிலி என்னைக்காதலி திரைப்படத்தை மதியம் பார்க்கசெய்து அன்று மாலையே பில்லா திரைப்படத்திற்கும்அழைத்துச் சென்று வந்ததை நினைவுகூறும் வண்ணம் நூலின் வரிகள் ஞாபகங்களை தோண்டியெடுக்கிறது.
சிறு வயதில் ஓடி விழும்போதோ சைக்கிள் ஓட்டி விழும்போதோ தூக்கி விடும் தாயின் கரங்கள் முதலில் அடித்துவிட்டே தூக்கும். சற்றுநேரத்தில் அணைத்துக்கொள்ளும் என்றாலும் விழுந்த வலியை விட தாய் அடித்த அடிக்கான அழுகை நிற்கவே நேரம் பிடிக்கும். அவ்வாறான ஒரு நிகழ்வே சிறு பிள்ளையாயிருக்கும்போது ஏழுமலையிடம் ஏற்பட்ட சண்டையால் ஆங்கில வழிக்கல்வி கற்கவியலா சூழல் தோழர் யுவாவிற்கு ஏற்பட்டுவிட்டதை அழகாக பதிவிட்டுள்ளார். நன்றி ஏழுமலை (நமக்கு தமிழே தகிடுதத்தோம்).
"தவறினை உணர்ந்து அதனை பதிவிடுவதில்லை. அதற்காக மன்னிப்பும் கேட்பதில்லை. நான் இழந்த காலங்களை மீட்டுக்கொடுப்பார்களா என்னைப் பின் வரிசையில் அமரச் செய்த ஆசிரியர்கள்" என்ற கவிஞர்சுகிர்தராணிக்கு யுவா தோழர் போல சில விதி விலக்குகளும் உண்டு. இந்தக்காலத்துல யாரு சாதி பாக்குறா? என்று பேசிவிட்டு எந்தக்காலத்திலும் சாதி பார்த்தால் தப்புதானே என உணர்ந்தேன் என்ற வகையில் யுவா தோழரின் முற்போக்கு நடை கம்பீரமாக நிற்கிறது.
பிள்ளையார் சதுர்த்திக்கு செட்டு கட்டி காதைச் செவிடாக்குவதில் துருத்திக்கொண்டிருக்கும் அலறவிடும் பக்தி, பரதேசி வாழ்க்கை, கண்முன்னால் தொலைந்துபோன ஓர் உயிர், இலக்கியப்பணி, அம்பேத்கரும் ஒரு கிராம குடியரசும், மண்ணூற பெய்யும் மழை.... என ஒவ்வொன்றும் நினைவை நனைக்கும் பதிவுகள்.
கவிதைகள் படிக்கும்போது மனதிற்குள் உணர்ச்சிகளைத் தூண்டித்தூண்டி அதிர்ச்சி, மகிழ்ச்சி, இயற்கை என நம்மை அள்ளிக்கொள்ளும் அக்கணங்களில்... இந்த கட்டுரைத் தொகுப்பில் தலைப்புகள் மட்டும் கவித்துவமாக. மற்றபடி உள்ளே செல்லச்செல்ல நம்மை நாம் வாழ்ந்த காலங்களைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் ஓர் அற்புத பதிவு.
மனமாய் இருப்பவள் மானஷா கட்டுரை மட்டும் எனக்கு இக்கட்டுரைத்தொகுப்பில் அன்னியப்பட்டுத் தெரிகிறது. மற்றபடி "மண்ணூறப் பெய்யும் மழை" நினைவுகளைக் கிளரும் அலை என்பதை யாவரும் அறியலாம் வாசிப்பிற்கு மனதினை உட்படுத்தும்போது...
வாழ்த்துகள் தோழர்.
-பெ.விஜயராஜ் காந்தி,
தாமரைக்குளம்
90 95 40 45 03

No comments: