June 02, 2013

சமீபத்தில் படித்த "வீழ்த்தப்பட்டவர்கள்"

கடந்த இரு வாரங்களில் நான் படித்த நூல்களில், எனக்கு முக்கியமாகப்பட்ட மூன்று நூல்களுள் ஒன்று மரியானா அசுவேலா எழுதியவீழ்த்தப்பட்டவர்கள்’ (Underdogs) எனும் ஸ்பானிய நாவல்.  தமிழாக்கம் அசதா. வெளியீடு : இளங்கோ நூலகம் (2002).

1915-ல் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட நாவல், இன்றைக்குப் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் வெளிவந்தும் இத்தனை ஆண்டுகள் படிக்காமல் போனேனே என்று வருத்தம் வந்தது. கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட மெக்சிகன் புரட்சியே நாவலின் களம். ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியை, அதன் ஃபெடரல் ராணுவத்தை எதிர்த்துச் சாமானியர்கள் மேற்கொள்ளும் ஆயுதப் புரட்சியானது, நாளடைவில் எப்படி உருமாறிச் சீரழிகிறது என்பதே நாவலின் போக்கு. அமைதியை விரும்பும் எளிய விவசாயியாக இருந்து, புரட்சிப் படையில் சேர்ந்து, தனிப்பட்ட சாகசங்களாலும் புரட்சியின் போக்காலும் ஜெனராகப் பதவி பெறும் டிமிட்ரியோ மாசியாஸே நாவலின் நாயகன்.

ஃபெடரல் ராணுவத்தின் கொலை-கொள்ளை-கொடுமைகளுக்கும் ஆள்பிடிப்பிற்கும் அஞ்சி வாழ்ந்த மக்கள், ஃபெடரல்களுக்கு எதிராகப் புரட்சி கீதம் இசைத்தபடி ஆயுதமேந்திய விவசாயிகளையும் தொழிலாளிகளையும் தங்களின் ரட்சகர்களாகப் பார்த்துக் கொண்டாடினார்கள். பல்வேறு புரட்சிப் படைகளுக்குள்ளும், அவற்றுக்கும் ஃபெடரல்களுக்கும் என்று ஆங்காங்கே துப்பாக்கிச் சண்டைகள். காட்டிக் கொடுப்புகள். பழி தீர்த்தல். கொலைகள். ஃபெடரல்கள் நடத்திய அதே கொலை-கொள்ளை-கொடுமைகளை, நாளடைவில் புரட்சிப் படைகளும் மக்கள் மீது நடத்துகின்றன. மக்கள் நம்பிக்கைக்கேற்ப ஒருவருமில்லை.

மெக்சிகோவைச் சேர்ந்த நாவலாசிரியர் மரியானோ அசுவேலாவும் தன் நிஜவாழ்வில், 1910களில் மாடிரோவின் படுகொலைக்குப் பின் வில்லாவின் புரட்சிப் படையில் மருத்துவராகச் சேர்ந்து நேரடி களஅனுபவம் பெற்றவர். அது போன்ற படைகளின் போக்கு கண்டு பெரும் கசப்பும் ஏமாற்றமும் அடைந்தவர். பின்னாட்களில் எழுத்தாளராகவும் ஏழைகளிடையே மருத்துவராகவும் மெக்சிகோ சிட்டியிலேயே வாழ்ந்து மறைந்தவர்இந்நாவலில் வரும் லூயி செர்வாண்டிஸ் எனும் பாத்திரம் அசுவேலாவோ என்று தோன்றுகிறது.

அசதாவின் நேர்த்தியான தமிழ் நடையில் மெக்சிகோவின் மலைகளும்நீரோடைகளும் மக்களும் தேவாலயங்களும் கண்ணெதிரில் விரிகின்றன

- யுவபாரதி

No comments: