June 23, 2010

தோழர் அ.மார்க்சுக்குக் கடிதம்



(நாயுடு சாதியினர் யாவரும் இடைநிலைச் சாதியினரா? என்பது குறித்து)
அன்புள்ள தோழர்,

வணக்கம். ‘எதிர்’ வெளியீடாக வந்துள்ள தங்களின் ‘தலித் அரசியல்’ படித்தேன். கடந்த இருபதாண்டு காலமாக தலித் அரசியல் சார்ந்து தங்களால் எழுதப்பட்ட முக்கியமான பல கட்டுரைகள் ஒரே நூலாகத் தொகுக்கப்பட்டுக் கிடைத்திருப்பது தலித் அரசியல் குறித்த புரிதலுக்கும் ஆரோக்கியமான விவாதத்திற்கும் அவசியமானதே.

இந்நூலில் ஆதிக்க சாதிகள் என்று குறிப்பிடும் இடங்களில் பார்ப்பனர் மற்றும் வேளாளரில் சில பிரிவினரான சைவ வேளாளர், தொண்டை மண்டல வேளாளர், கார்காத்த வேளாளர், முதலியார் ஆகியோரைச் சரியாகவே அடையாளம் காட்டுகிறீர்கள். நகரத்தார் இப்பட்டியலில் விடுபட்டுள்ளனர். தெலுங்கராட்சிக்குப் பின் ரெட்டியாரையும் இப்பிரிவில் சேர்க்கலாம் என்கிறீர்கள். ஏற்புடையதே. (ரெட்டியாரிலும் கஞ்சமர் எனும் பிற்பட்ட வகுப்பினர் உண்டு என்பது வேறு.) ஆனால் நாயுடு சாதியினரை மட்டும் ஒட்டுமொத்தமாக இடைநிலைச் சாதியினர் (ப.96) என்றே குறிப்பிடுவதோடு, பார்ப்பனர் மற்றும் வேளாளர்களின் நகரம் சார்ந்த ஆதாயக் குடிப்பெயர்வுக்குப் பின்னரே கிராம அளவில் ஆதிக்கத்திற்கு வந்துள்ள கள்ளர், வன்னியர், நாடார் முதலான இடைநிலைச் சாதியினரோடு நாயுடு சாதியினரையும் (ப.165) இணைத்தும் குறிப்பிடுகிறீர்கள். ஆனால், வேளாளர்தம் சில பிரிவினரைப் பகுத்து அடையாளம் கண்டது போல நாயுடு சாதியினரையும் காண வேண்டியுள்ளது.

இன்று தமிழகத்தில் நாயுடு என்று ஒரே பெயரில் அழைக்கப்பட்டாலும் இரு வேறு தனித்த வகைப்பாட்டினர் அவர்களில் உள்ளனர்.

1. புஷ்யமித்திர சுங்கனின் பார்ப்பனிய எதேச்சாதிகாரத்திற்குத் தப்பி கங்கைச் சமவெளிப் பகுதியிலிருந்து மத்திய மேற்கு ஆந்திரம் மற்றும் மத்தியக் கிழக்குக் கருநாடகத்தின் கிருஷ்ணா நதிக்கரைப் பகுதியில் குடியேறி, பின் அங்கிருந்து கிளைத்துத் தெற்கிலும் வடக்கிலும் பரவிய பௌத்தக் குர்மி (Buddhist Kurmi) இனத்தவர்கள் எனக் கருதப்படும் கம்மவார்கள். [பார்க்க: www.wikipedia.com/ (search) kamma]

2. கங்கைச் சமவெளியின் காம்பிளி, மிதிலை, அயோத்தி ஆகிய பகுதிகளிலிருந்து மத்திய மேற்கு ஆந்திரம் மற்றும் மத்தியக் கிழக்குக் கருநாடகத்தின் கோதாவரி நதிக்கரைப் பகுதியில் குடியேறி, பின் அங்கிருந்து கிளைத்துப் பெரிதும் தெற்கிலும் கிழக்கிலும் சற்றே வடக்கிலும் பரவிய இந்தோ - ஆரியப் பழங்குடியினரான காம்ப்பு இனத்தவர்கள் எனக் கருதப்படும் காப்புகள் எங்கிற பலிஜர்கள். (பலிஜர் மட்டுமின்றி கவரை, கம்பளத்தார், காஜுலர் (வளையக்கார நாயுடு) என்ற சாதிகளும் காப்பு வகையில் அடங்குவர்). [பார்க்க: www.wikipedia.com/ (search) balija]

இவற்றில் தென்னகத்தில் வேர்விட்டுச் செழித்த விஜயநகரப் பேரரசு, குறிப்பாக அதிலிருந்து கிளைத்த செஞ்சி, தஞ்சை, மதுரை, கண்டி நாயக்க அரசுகள் யாவும் பலிஜ நாயுடுக்களுடையவை (பார்க்க: www.wikipedia.com/ (search) balija & Caste and Race in India, G.S.Ghurye, p.106).

தமிழகத்தின் பார்ப்பன - வேளாளப் புலவர்கள் பலரும் ‘தென்மொழியும் வடமொழியும் பழுதறக் கற்ற பாங்கு’ போல, தெலுங்குப் பார்ப்பனர் - பலிஜ நாயுடுக்கள், தெலுங்கு - வடமொழி இலக்கிய உருவாக்கதில் நெருங்கிய பிணைப்பு கொண்டவர்கள். தமிழகத்தை வெற்றி கொண்டு விஜயநகரப் பேரரசுக்குள் கொணர்ந்த குமார கம்பணனின் வீரம் குறித்து அவன் மனைவி கங்கா தேவி எழுதியது ‘மதுரா விஜயம்’ என்கிற வடமொழி நூலே. பல நாயக்கர்கள் வடமொழியில் நூல் யாத்தவர்கள் [பார்க்க: www.wikipedia.com/ (search) balija].

வர்ணாசிரம இறுக்கத்தையும் வடமொழி ஆதிக்கத்தையும் தமிழகத்தில் வளப்படச் செய்தவர்கள் நாயக்க அரசர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இவ்விடயத்தில் இவர்கள் தமிழரசர்களை விட பன்மடங்கு மிஞ்சியவர்கள். நிலம் முழுக்க மன்னனுக்கே சொந்தம் என்ற நிலை வலுக்கொண்டதும் இவர்கள் காலத்ததே.

மதுரை விசுவநாத நாயக்கர் ஆட்சியின் கீழ் வகுக்கப்பட்ட எழுபத்திரண்டு பாளையப்பட்டுகளில் (பாலிகர்(Palegar) பற்று) மறவர்க்குட்பட்ட பதினொன்று, கம்மவார்க்குட்பட்ட இளசை, குருவிக்குளம் போன்ற சில தவிர பிற யாவும் தெலுங்கு - கன்னட பலிஜர் சாதி வகையினரதே. மதுரை நாயக்க அரசுகளில் அரசருக்கு அடுத்த ஆற்றல் வாய்ந்த பதவியான தளவாய் பதவியை அலங்கரித்தவர்கள் தொண்டை மண்டல வேளாளரான அரியநாத முதலியாரைத் தவிர்த்து, பிற அனைவரும் பெரும்பாலும் தெலுங்குப் பார்ப்பனரும், பலிஜ நாயுடுக்களுமே.

ஆங்கிலேயர் ஆட்சி இங்கே வேரூன்றும் வரை தமிழகத்தை ஆண்டவர்கள் நாயக்கர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னும் கூட பெருநிலக் கிழார்களாயும், பின் பெரு வணிகராயும், இன்றும் வணிகத்திலும் அரசியலிலும் கோலோச்சுபவர்களாக இருப்பவர்கள் இவர்கள். கீழவெண்மணி சம்பவத்திற்குக் காரணமான நிலக்கிழார் இவ்வினத்தவரே என்பதும் நினைவு கூரத் தக்கது. இன்றும் பலிஜரும் கம்மவாரும் அரசால் முற்பட்ட வகுப்பினராகவே வகைப்படுத்தப்படுபவர் ஆவர்.

கம்பளத்தார், காஜுலர் (வளையக்கார நாயுடு) போன்ற நாயுடு சாதியினரை, இடைநிலைச் சாதியினாராகப் பார்ப்பது ஏற்புடையது. கவரைகளைப் பின்னாளில் ஆதிக்கம் பெற்ற இடைநிலைச் சாதியினர் எனலாம். ஆனால் தமிழகத்தின் பார்ப்பனர் - வேளாளர்களோடு இணையாய்ப் பார்க்க வேண்டிய ஆதிக்க சாதிகளான பலிஜா - கம்மா சாதியினரையும், நாயுடு என்ற ஒற்றைப் பெயரில் இடைநிலைச் சாதியினர் என்பது ஏற்கத் தக்கதல்ல.

தமிழகத்தை ஆட்சி செய்ததில் அதிகமும் பலிஜ நாயுடுக்கள் என்பதால் இக்கடிதத்தில் கம்மவார் பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தற்காலத்தில் ஆந்திரத்தில் காப்புவினரை விட கம்மவாரின் கையே ஓங்கியுள்ளது என்பதும் அதை எதிர்த்து காப்பு(பலிஜா)வினர் அரசியல் ரீதியாக அணிதிரள்கின்றனர் என்பதும் வேறு.

ஆகவே, வேளாளர்தம் சில பிரிவினரைப் பகுத்து அடையாளம் கண்டது போல நாயுடு சாதியினரையும் காண வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக இடைநிலைச் சாதியினர் எனக் கூற இயலாது. தவிர அனைத்து நாயுடு சாதியினரையும் ஒன்றாய்ப் பாவித்து, மொழிச் சிறுபான்மையினர் என்று கவசம் பூட்டுவோமேயானால், தெலுங்கு - கன்னடம் பேசும் பிற ஆதிக்க சாதிகளும் இவ்விதம் இடம்பெறும் அபாயமுண்டு என்பதையும் மறுக்கமுடியாது.

நன்றி.

அன்புடன்,
ஆர்.மணிகண்டன்.

1 comment:

Anonymous said...

[url=http://www.forex-trading-advise.info/forum/showthread.php?p=5231#post5231]order declomycin[/url]
declomycin for siadh
declomycin