May 04, 2020

கொல்வான், அக்கள்வன் மகன்

பிள்ளைப் பருவத்திலிருந்தே அவளுக்குத் தெரிந்தவன் அவன். தோழியோடு சேர்ந்து கட்டிய மணல் வீட்டைத்  தன் காலால் சிதைத்து ஓடியவன். தலையில் சூடிய பூச்சரத்தைப் பிய்த்தெறிந்து அழவிட்டவன். தோழியோடு, பந்து விளையாடினால் அதையும் பறித்துக்கொண்டு ஓடிக் கதறவிட்டவன். ஒருத்தருக்கும் அடங்காதவன்.

ஒரு நாள், வீட்டில் அவளும் அவளது அன்னையும் இருக்கின்றனர். வாசலில் வந்து நின்று, குடிக்க நீர் கேட்கிறான் அவன். பொற்கலயத்தில் நீர் மொண்டுபோய்க் கொடுக்குமாறு சொல்கிறாள் அன்னை. வந்திருப்பவன் அவன் என்று தெரியாமல் அப்படியே செய்கிறாள் அவள். நீர் கொடுக்கச் சென்றவளின் கையைப் பிடித்து இழுக்கிறான் அவன். 'இவன் செய்கிற காரியத்தை வந்து பாரம்மா' என்று அலறுகிறாள் அவள். பதறி ஓடி வருகிறாள் அன்னை. 

உடனே, 'நீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் வந்துவிட்டதம்மா' என்று சமாளிக்கிறாள் அவள். உண்மை தெரியாத அன்னையோ, 'மெதுவாய்க் குடித்தால் என்ன?' என்றபடி அவன் முதுகை நீவிக் கொடுக்கிறாள். அவளைக் கொல்வது போல் பார்த்துக் கண்ணால் சிரிக்கிறான் அவன்.

நடந்தது நடந்தவாறு தன் தோழியிடம் நேர்ப்பேச்சில் அவள் கண்விரியச் சொல்வது போல் அமைகிறது குறிஞ்சிக்கலியில் வரும் இப்பாடல்:

"சுடர்த் தொடீஇ! கேளாய் - தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலில் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லீரே!
உண்ணுநீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
'அடர்பொன் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா' என்றாள்; என யானும்
தன்னை அறியாது சென்றேன்' மற்று என்னை

வளைமுன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்! என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத், தன்னை யான்,
'உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ; மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!"

இப்பாடலில் தொனிக்கும் சீண்டலும் சிலிர்ப்பும் சொல்முறையும் ஒருமுறையேனும் இதைத் திரும்பவும் படிக்கத் தூண்டும்.

#கலித்தொகை

May 01, 2020

அவரும் வாரார் முல்லையும் பூத்தன

1

மரத்திலிருந்தபடி நீர்ப்பரப்பையே பார்த்திருந்து ஒரு மீன் கண்டதும் சர்ரெனப் பாய்ந்து கவ்வி உயரப் பறக்கும் மீன்கொத்தி. ஆனால், கடல் அலைகளின்  மேலமர்ந்தபடி அவற்றின் அசைவுகளுக்கேற்பச் சிறகடித்துக் கொண்டே அவ்வலைகள் புரட்டிவிடுகிற மீன்கள் ஒவ்வொன்றாய்க் கவ்வி விழுங்கும் நாரை. குறுந்தொகைப் பாடல்கள் மீன்கொத்தி என்றால் கலித்தொகைப் பாடல்கள் நாரை.

2

ஒரு வரிக் கவிதையாக மந்திரம் போல என் மனதில் ஒலிக்கும் பாடல் வரிகளில் குறுந்தொகையில் வரும் 'அவரும் வாரார் முல்லையும் பூத்தன' என்பது முக்கியமானது.

"அவரும் வாரார் முல்லையும் பூத்தன
பறிஉடைக் கையர் மறிஇனத்து ஒழிய
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறுபசு முகையே"

என்பது முழுப்பாடல். மழைக் காலம் தொடங்குவதற்குள் திரும்பிவிடுவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் சொன்ன காலத்திற்குள் வரவில்லை என்பதால் அவன் வரவுக்காகக் காத்திருந்த தலைவியின் சொற்கள் இவை. மழைக்குப் பின்னர்தான் முல்லைக் கொடி பூக்கும். இதை அறிந்தாலே தலைவி சொல்வது தெரிந்து விடுகிறது. தொரட்டிக்கொலும் கையுமாக  ஆடுகளோடு செல்கிறார்கள் இடையர்கள். அவர்களில் ஒருவன் தலைவியின் வீட்டிற்குப் பால் கொண்டுவந்து கொடுத்து விட்டு உணவு பெற்றுக்கொண்டு விரைகிறான். அவன் தலையில் அப்போதே பறித்த இளம் முல்லைப் பூக்களைச் சூடியிருப்பதைத் தலைவி பார்க்கிறாள். ஆக, மழைக்காலமே வந்துவிட்டது. தலைவனோ திரும்பி வரவில்லை. 'அவரும் வாரார் முல்லையும் பூத்தன'.

3

'அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்' எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடல் ஒன்று, பாலை நிலத்தில் யானை, புறா, மானின் செயல்கள் என்று அடுக்கடுக்கான காட்சிகளைச் சொல்லிச் செல்லும். 'இந்த நாளில் திரும்பி வருவேன்' என்று தலைவியிடம் சொல்லி, பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவனோ (மேற்சொன்ன குறுந்தொகைப் பாடலின் தலைவன் போலவே) குறிப்பிட்ட நாள் வந்தும் வரவில்லை. அதனால் துன்புற்ற தலைவிக்கு ஆறுதல் சொல்லும் தோழியின் சொற்களாக வரும் நீண்ட பாடல் இது.

அதில் மூன்று காட்சிகள் அத்தனை அழகானவை.

"...
பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல்
....
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்உண்ணும் களிறுஎனவும் உரைத்தனரே
...
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறக ரால்ஆற்றும் புறவுஎனவும் உரைத்தனரே
...
இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்துஅளிக்கும் கலைஎனவும் உரைத்தனரே...
..."

அதாவது, பொருள் தேடப் பிரிந்து சென்ற காதலர் திரும்பி வருவார். 'பாலை நிலத்தில் கிடைப்பதற்கு அரியதாகக் கிடைத்த நீரையும் யானைக்குட்டி கலக்கிவிட்டுவிடும். தாகம் அதிகமிருந்தாலும் ஆண்யானை அந்தக் கொஞ்சம் நீரையும் தான் அருந்தாமல், முதலில் தம் பெண்யானைக்கு ஊட்டிவிட்டு, மிச்சம் இருப்பதையே தான் அருந்தும்' என்றாரே! 'பாலை நிலத்தின் வெம்மை தாளாமல் தவிக்கிற தம் பெண்புறாவின் வேதனையை, ஆண்புறா தம் மெல்லிய சிறகுகளால் விசிறியபடி ஆற்றிவிடும்' என்றாரே! 'பாலை நிலத்தில் நிழல் இல்லாமல் தவிக்கிற தம் பெண்மானுக்கு, ஆண்மான் தான் வெயிலில் நின்று தன் நிழலையே கொடுத்துப் பேணும்' என்றாரே காதலர்! (இப்படிப்பட்ட இணைகளைக் காணும் காதலர், உன்னை வாடச் செய்வாரோ? நிச்சயம் வருவார்.) என்று தலைவியிடம் சொல்கிறாள் தோழி.
'பொருள்வயின் சென்றநம் காதலர் வருவர்கொல்'.


துன்பமும் துணையாக நாடின்

'துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு'

படிக்கையில் திருக்குறள் என்றே தோன்றும் இவ்வரிகள் கலித்தொகையில் வருகின்றன. பாலைக் கலி.

'மரைஆ மரல் கவர மாரி வறப்ப
வரைஓங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரைஅம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உள்நீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத்

தண்ணீர் பெறாஅத் தடுமாற் றுஅருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடுஎன்றால்
என்னீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின்னீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்புஅறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு'

பாலை நிலத்தின் வறட்சியைக் காட்சிப்படுத்தும் இக்கலிப்பா பொருள் தேடிப் பிரியப் புறப்பட்ட தலைவனை நோக்கித் தலைவி கூறுவதாய் அமைந்துள்ளது.

"மழை பொய்த்துவிட்டது. புல்லின் நுனியைக் கூடக் காணாததால் காட்டுப் பசுவைக் கற்றாழை கூடக் கவர்கிறது. உயர்ந்த மலைகள் கொண்டதும் கடந்து செல்வதற்கு அரியதுமான பாலை நிலத்தின் வழியாகச் செல்பவர்கள், ஆறலை கள்வர் தமது முதுகில் கட்டிய சுரைக்குடுவையிலிருந்து எடுத்து எய்யும்  அம்புகளுக்குப் பலியாகிறார்கள்.

அக்கள்வரும் கூடத் தமது தொண்டைநீர் வற்றிப்போய், தாகத்தால் தவிக்கும் நாக்கை நனைக்கக் கூடத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.  அப்படி, கண்ணீர் மட்டுமே நனைக்கக் கூடிய கடுமை நிறைந்த பாலைவழி அது.

நான் இத்தனை எடுத்துச் சொல்லியும் ஏதும் அறியாதவர் போல, அவ்வழிச் செல்வதையே மீண்டும் சொல்வது என்பது பெருமை பெற்ற உமக்கு ஏற்றதல்ல. அன்பற்றவர் போல எனக்குத் துன்பம் செய்யாதீர்.

(மாறாக) அப்பாலை வழியே என்னையும் உடன் அழைத்துச் செல்க. துன்பமே வந்து சேர்ந்தாலும், நாம் இருவரும் சேர்ந்திருப்பது போன்ற இன்பம் வேறு உண்டா?"

October 26, 2018

எனக்கும்தான் (Me Too)

பொதுவாக பாதிப்பை உண்டாக்கியவர்களை விடுத்து பாதிப்புக்கு உள்ளானவர்களையே கேள்வி கேட்டு நிலைகுலையச் செய்யும் சமூக அமைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதிலும் பாலியல் ரீதியான பாதிப்பு பெண்ணுக்கு நேர்ந்தது அல்லது நேர்ந்திருக்கிறது எனில் கேள்விகளும் அறிவுரைகளும் அப்பெண்ணை நோக்கியே வீசப்படுகின்றன. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனெனில் 'இவள் ஏன் அங்கே போகணும், இப்படி இப்படி இருந்தா அப்படி ஆகியிருக்காது' என்ற எண்ணமே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

பணியிடத்தில் பெண்ணுக்குப் பாலியல் சீண்டல் அல்லது தாக்குதல் என்பது எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது என்பதும், இதைச் சகித்தும் வெளிச் சொல்லாமல் குமுறலோடு கடந்துமே பெண் நகர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதும் எவரும் அறியாததல்ல. தொடக்கக் காலத்தில் பெண் இதைத் தவிர்ப்பதற்கான எளிய தீர்வாக நம்மிடம் இருந்தது 'நீ ஒன்னும் இனிமே வேலைக்குப் போகவேண்டாம். நீ வேலைக்குப் போய்தான் குடும்பத்துக்கு ஆகணும்னு ஒன்னுமில்லை' என்பது. இன்றைய பொருளியல் சூழல் அப்படிப் பேசும் இடத்திலிருந்து குடும்பத்தை வெகுவாக மாற்றியிருக்கிறதுதான்.

குடும்பத்திற்காக மட்டும் பணிபுரியச் செய்வதில்லை ஆண் எனும் தன்னிலை. பொருளியல் தேவை என்பதற்காக மட்டுமில்லாமல், பொருளியல் சுதந்திரம், சமூக மதிப்பு, சுயமரியாதை, தன்னடையாளம் என அனைத்திற்கும்தான். பாலின பேதமின்றி, பெண் எனும் தன்னிலை பணிக்குச் செல்வதும் இவை அனைத்திற்கும்தான். ஆனால் பெண்ணுக்கென்று எண்ணும்போது குடும்பப் பொருளியல் தேவைக்காக மட்டுமே பணிக்குச் செல்லலாம் என்பதே பெரும்பான்மையான குடும்ப மனநிலை. அதாவது வீடோ வெளியோ பெண் குடும்பத்திற்காக மட்டுமே பணி செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

குடும்பத்தின் இந்த எதிர்பார்ப்பு எனும் அழுத்தத்துடனே பெண் பணியிடம் விரைகிறாள். பணியிடத்தில் எதிர்கொள்ள நேரிடுகிற பாலியல் சீண்டல் அல்லது தாக்குதலை வீட்டிலும் சொல்லமுடியாத நிலை இதனாலே ஏற்படுகிறது. வீட்டில் சொன்னாலும் பாதிப்பு தனக்கே ஏற்படும் என்று நினைக்க நிர்ப்பந்திக்கப்படுகிற எதார்த்தம், வீடும் வெளியும் தன் குரலைச் செவிமடுப்பதில்லை என்ற ஆதங்கம் மற்றும் பாதுகாப்பின்மை தரும் மன அயர்ச்சி என்றே பழகிப் போகிறாள். இவ்வயர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடிந்தவர்கள் வெகுசொற்பம்.

பணியிடம் என்ற வகைமையில் எந்த இடமுமே பெண் மீதான பாலின வேறுபாடு காட்டல், அதன் வழி சீண்டல் இவற்றிலிருந்து விதிவிலக்கானவை இல்லை. கல்வி நிலையம், காவல் நிலையம், அலுவலகம், தொழிலகம், மருத்துவமனை, வணிகத்தலம்,திரை, ஊடகம், இன்னபிறவும். சக ஊழியர், முதலாளி/அலுவலர் என்பவர்களாலே பாலியல் சீண்டல் அல்லது தாக்குதல் நேர்கிற போது, தனது சமூக மதிப்பு, பாதிப்புக்கு உள்ளாக்குபவரது சமூக மற்றும் பணி அந்தஸ்து, தனது பணி பாதுகாப்பு, புரிந்துகொள்ள மறுக்கும் குடும்ப உறவுகள் உள்ளிட்ட நிர்ப்பந்தங்களால் அச்சுறுத்தப்பட்டு மௌனமாக்கப்படுகிறாள் பெண்.

சின்மயீ போன்ற பிரபலங்கள், அறியப்பட்ட சில ஊடகவியலாளர்கள் போன்றோரே பல்லாண்டுகளுக்கு முன்பு தங்களுக்குப் பணியிடங்களில் நேர்ந்த பாலியல் அத்துமீறல்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்த இந்நாட்டில் இத்தனை காலம் ஆகியிருக்கிறது. அவர்களும் அவதூறுகளுக்கும் அநாகரிகக் கேள்விகளுக்கும் இன்றும் உள்ளாக வேண்டியிருக்கிறது.

எனில் சாமானியராக உள்ள பெண்கள் எதிர்கொண்டதும் எதிர்கொள்கிறதுமான பாலியல் அத்துமீறல்களை அவர்கள் வெளிப்படுத்த இந்த வெளி என்னவாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது?

22.10.2018

November 20, 2017

“அறம்” படம் பார்த்தேன்

முகநூல் மற்றும் இணையவெளியில் பலரும் அறம்படத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டத்தக்க படம் என்று பலரும் கருதுவதற்கான கூறுகளாக என்னென்ன இருக்கின்றன?
1. அடிக்கடி நம் கவனத்திற்கு வந்து கலங்கச் செய்கிற மூடப்படாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து மீட்கப்படுகிற நேர்வுகள் பற்றிப் பேசியிருப்பது.
2. அரசின் கையாலாகாத் தனமும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தனமுமே அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று உரத்து முழங்கியிருப்பது.
3. நமது அதிகார அமைப்புக்குள்ளும் மனிதநேயம் மிக்க (தெய்வத்தன்மை?) அதிகாரி அவதரிக்கிறார், ஆனால் அவரைத் தவிர அனைவரும் மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்கிற கருத்து வெளிப்படும் காட்சியமைப்பு.
4. மக்கள் நல்லவர்களாகவும் அதிகார அமைப்பு நாற்றமடிப்பதாகவும் இருப்பதால் நல்ல அதிகாரி பணி துறந்து மக்களுக்காக மக்களை நோக்கி வருகிறார் என்ற நம்பிக்கை(?) முடிப்பு.
5. நயன்தாரா மட்டுமின்றி அனைத்து நடிகர்களும் பெரும்பாலும் தமது பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார்கள், இடம் சார்ந்த பதிவுகள் நன்றாக இருக்கின்றன என்கிற அபிப்பிராயம்.
இவற்றில் முதல் மற்றும் இறுதிக் கூறுகளைத் தவிர மற்ற மூன்றும் நமது வழக்கமான நாயக மையம் கொண்ட வணிகப் படங்களின் கூறுகள்தான்.
மக்கள் நல்லவர்கள் - ஏமாளிகள், ஆட்சியாளர்கள் கெட்டவர்கள் - சுயநலமிகள் என்கிற இருமை எதிர்வு இவற்றின் பொதுக் கூறு. பிரச்சனைகளுக்கு மற்றவரே பொறுப்பு என்கிற கருத்துரை பொதுப் புத்திக்கு விடுதலையைத் தந்து விடுகிறது. நாயகன்/நாயகி நல்லவர் என்பதால் நல்லவர்களுக்காகப் போராடி வெற்றி பெறுகிறார். நல்லவர்கள் பக்கம் நிரந்தரமாக வந்து விடுகிறார். எளிய வாய்ப்பாடு இது.
முதல் கூறு இப்படத்திற்கான களம் பற்றியது. அவ்வப்போதைய சமகாலப் பிரச்சனைகள் பலவற்றை களமாகக் கொண்டு இதைப் போல பல நூறு படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் பிரச்சனையைக் கொண்டு இது. அவ்வளவே.
நாயக மையம் என்கிற வழமைக்கு மாறாக நாயகி மையம் கொண்ட படம் இது. நாயகி ஒரு நல்ல அதிகாரி என்பதற்காக வழக்கம் போல மற்ற அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரையும் பொறுப்பற்றவர்களாகக் காட்டியிருக்கிறது படம். இதுவும் வணிகப்படங்களில் வழக்கமானதுதான்.
இப்படத்தில் மையப் பாத்திரம் நாயகி என்பதற்குப் பதிலாக நாயகன் என்று இருந்திருந்தாலும் பெரிய வேறுபாடு இல்லை. உங்களை எங்கள் மகளாகப் பார்க்கிறேன்” “நாங்க கும்புடுற கன்னிமார் சாமிகளில் ஒரு கன்னியா பார்ப்போம்என்ற வசனங்கள் "மகன்", "முருகன்" என்று மாறியிருக்கும். பல ஆண்களுக்கு மத்தியில் பெண் அதிகாரியா உட்காரும்போதுதான் எவ்வளவு கஷ்டம்னு உணர்றேன்என்பதான வசனம் இருந்திருக்காது.
இயக்குநர் தாம் சொல்ல நினைத்ததையெல்லாம் ஒரே நேரத்தில் காட்டூர் வெளியில் பதைக்கும் பாத்திரங்கள் வாயிலாகவும், இடையிடையே தோன்றும் ஊடக விவாதம் வாயிலாவும் பேசியேவிடுகிறார். திரைப்படமாக அதைக் காட்டவேயில்லை. சமகாலப் பிரச்சனைகளைக் களமாகக் கொண்டும் திரைமொழியில் அதைச் சரிவரக் காட்டாமல் விடுவதால், மக்களுக்கோ அரசுக்கோ மனதில் ஆழ உணர்த்தாமல், செய்தியாக நினைவூட்டிக் கடந்துவிடும் வழக்கமான திரைப்படங்களில் ஒன்றாகவே இதையும் கருதத் தோன்றுகிறது.
நயன்தாரா தனது பாத்திரத்தை மிக நன்றாகச் செய்திருக்கிறார். புலேந்திரன், அவரது மனைவி, குழந்தைகள், பிரதான மருத்துவர், தீயணைப்பு அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் முதலான பாத்திரமேற்றவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

May 29, 2017

மீரான் மைதீனின் ‘கவர்னர் பெத்தா’ : மனம் நெரிக்கும் நினைவுகள்

பொறுப்புகளும் அவற்றின் பக்கக் கிளைகளென நீளும் மன அழுத்தங்களும்தான் நம்மை இருக்கவும் விடுவதில்லை பறக்கவும் விடுவதில்லை என்றால் யார்தான் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவற்றில் மூழ்கியோ மூழ்கியதிலிருந்து எழுந்த நினைவுகளிலிருந்தோ விடுபட முனைந்து வெற்றியோ தோல்வியோ தழுவுவது அவரவர்பாடாயிருக்கிறது.

கவர்னர் பெத்தா தொகுப்பை ஓரிரு மாதங்களுக்கு முன்பு வாங்கியிருப்பேன். அவ்வப்போது புத்தகத் தலைப்பு கண்ணில் படும்போதெல்லாம் பெரியம்மா ஒருத்தர் பெரும் பொறுப்பிலிருந்தோ அல்லது அதிகாரத் தோரணையினாலோ கவர்னர் என்று அழைக்கப்படுகிற கதையாயிருக்கும் என்றுபட்டிருக்கிறது. நேற்றைய போது தொகுப்பை வாசித்தபோதுதான் தெரிந்தது. பத்தே பத்து கதைகள் கொண்ட அழகிய தொகுப்பு என்பதும், பீர்மா பெத்தாவுக்குக் கவர்னர் பெத்தாவென்று பேர் வந்ததற்குக் காரணம் நாம் நினைத்ததில்லை என்பதும். இவையெல்லாம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எழுதிய கதைகள் என்கிறார் மீரான் மைதீன்.

அசன் கண்ணாப்பா கதையில் வருகிற கண்ணாப்பாவும் ஓட்டு கதையில் வருகிற ஷாபியின் உம்மம்மாவும் எண்பதுகளில் கிராமப்புறங்களில் குழந்தைகளாயிருந்தவர்களின் தாத்தா பாட்டிகள். கண்ணாப்பா மாதிரியான தாத்தா எனக்கு இல்லை என்பதும் உம்மம்மா மாதிரி கோமதிப்பாட்டி இருந்ததும் ஞாபகம் வந்தது. வெறும் கையும் காலுமே முடுக்கி ஓட்டும் வாகனமாய்க் கொண்டு வாயால் ஒலியெழுப்பி ஓடிய காலத்துக்குள் தள்ளிவிடுகின்றன இக்கதைகள்.

தெருவிலுள்ள சின்னப் பிள்ளைகள் ரசிக்க ரசிக்கக் கதை சொல்வதே தனது முதுமைக்கும் தனிமைக்குமான துணையும் சக்தியுமென இருந்த அசன் கண்ணாப்பாவை விட்டு, சின்னப் பிள்ளைகள் விலகிச் செல்ல அவர் எப்போதும் பெருமை பேசிவரும் பேரனே காரணமாகிவிடுகிறான். அவன் அரேபியாவிலிருந்து வாங்கிவந்த டிவி பெட்டி பிள்ளைகள் பெரியவர்களென எல்லாரையும் விழுங்கிவிடுகிறது. சீந்துவாரற்றுப் போய்விடுகிற கண்ணாப்பாவின் ஆற்றாமையும் புலம்பலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கால நகர்வினாலும் அறிவியல் வளர்ச்சியினாலுமான சில எந்திரங்களின் ஈர்ப்பின் முன் கண்ணாப்பாவோ அவர் பேரனோ சின்னப்பிள்ளைகளோ யார்தான் என்ன செய்யமுடிகிறது.

ஷாபிக்கும் அவனது உம்மம்மாவுக்குமான பிரியத்தைச் சொல்லித் தொடங்கும் கதை ஓட்டு’. ஆனால் அப்படியே போய்விடவில்லை. பள்ளியில் சேர்ந்த பிறகான அவனது கவனப்பாடு மாறும் திசையில்தான் கதை நகர்கிறது. பெரியவர்களது கட்சி அரசியல் மற்றும் தேர்தல் நடத்தைகள் என்பவை பிள்ளைகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பகடி செய்கிறது. பிள்ளைகளின் தேர்தல் களமும் தேர்தல் முறையும் பார்ப்பது நமக்கு கலகலப்பாக இருந்தாலும் கூடவே ஒரு பெருமூச்சும் வருவதை உணராமல் இருக்கமுடியாது.

மனம் பேதலித்துவிட்ட பால்ய கால நண்பனைப் பார்க்கக் கதைசொல்லி செல்கிற கணங்களும் அவன் குறித்த இளம் நினைவுகளுமாக பிணைந்து முயங்குகிற கதை யூசுப்’. கதையோட்டம் எனக்கு இரு நினைவுகளைக் கிளர்த்திற்று. குணசீலம் கோவிலை ஒட்டிய சுற்றிலும் வேலி கட்டிய மண்டபத்தில் சங்கிலியில் கட்டப்பட்ட காலோடு கிடந்த இளைஞன் ஒருவனுக்கு, ஒரு இளம் தம்பதி வாழைப்பழத்தை வீசி எறிந்து வேடிக்கை பார்த்ததும், அவன் அதை அப்படியே எடுத்து தோலோடு கடித்துத் தின்றதும் ஒன்று. ஏர்வாடி தர்காவினுள்ளே நுழைவாயிலை அடுத்து இடதுபுறமுள்ள ஒரு மண்டபத்தில் புர்க்கா அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி அரபி மந்திரம் எழுதப்பட்டிருந்த உள்ளறைச் சுவரின் மீது ஓடிச் சென்று மோதுவதும், பின் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்படியே வெளியே ஓடி வந்து கர்ணமடித்து மணலில் விழுவதுமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது மற்றொன்று. மௌனே... எம் புள்ளையைப் பாத்தியா?’ எனக் கேவும் யூசுப்பின் உம்மா குரல் எங்கெங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி கேவக்கூட ஒரு ஜீவனும் இல்லாதவர்களும் இருப்பார்கள்.

மூன்று பெண்களைப் பெற்று வளர்த்து கட்டிக்கொடுத்து, வரிசையாய் மாற்றி மாற்றிப் பிரசவம் என்று கவனித்துத் தேய்ந்து போகும் அஸ்மா – மொய்து சாகிபின் ஆற்றாமைகளையும் நில்லா ஓட்டங்களையும் சொல்கிற கதை சம்மந்தக்குடி. மூத்த மாப்பிள்ளையின் உம்மா என்கிற  ஜபர்தஸ்தால் சம்பந்திகளைக் கிறங்கடிக்கவேண்டும், பெண்டு பிள்ளைகளை விட்டு அரேபியாவிலேயே மகன் இருந்து மாதச் சம்பளத்தைத் தன் பெயருக்கு அனுப்பினால் போதும் என்றிருக்கிற சலீமின் உம்மாவும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஓரிரு மாதம் வரவும், தன் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சற்றே வளரந்த பின்னே முதல்முதலாய்ப் பார்க்கவுமாக வாய்க்கிற சலீமும், கருவுற்ற காலத்து மனைவியின் எளிய ஏக்கங்களைக் கூட மென்று முழுங்கியே கண்ணால் மட்டும் காட்ட முடிகிற ஜெரினாவும் பொருளீட்ட வேண்டி அரேபியா செல்கிற பலர் வீட்டு மாந்தர்கள்.

ஊர்விட்டு ஊர்வந்து பள்ளிவாசல் ஒன்றில் மோதியாராக இருக்கிறார் காதர் சாகிபு. ஒவ்வொரு வேளை உணவும் ஒவ்வொரு வீடு என்றும் பள்ளிவாசல் வராந்தாவே வசிப்பிடம் என்றும் ஆகிவிட்ட அவர் மீது  அவ்வூர்க்காரர்கள் காட்டும் இளக்காரமும் சீண்டலும் இலேசுப்பட்டதல்ல. அவர் படுக்கவென வாய்த்த பெஞ்சுகள்தான் அவ்வூரில் யாரொருவர் மௌத்தாகிப் போனாலும் கிடத்தப் பயன்படுபவை. ஆகவே அவருக்குப் படுக்கையும் நிச்சயமில்லை, உறக்கமும நித்தியமில்லை. ஏதோ நாலு காசு சேர்த்து ஊரிலிருக்கும் தன் பெண்ணை கொஞ்சம் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தால் போதும் என்று அனைத்தையும் தாங்கிக்கொண்ட காதர் சாகிபு, ஒரு கட்டத்தில் இங்கிருந்து போனால் போதும் என்று நினைத்தாலும் போகமுடியாமல் போகிறது. பொருளாதார வலுவற்ற ஒரு மனிதரின் கதை பெஞ்சு’.

பீர்மா பெத்தாவுக்கு அவரது வயதொத்த சினேகிதிகளுடனான பேச்சும் கிண்டலும் அத்தனை பிடித்தமானது. அவர்கள் ஊர் தர்காவுக்குக் கவர்னர் பாத்திமா பீவி வருகிறார் என்ற சேதி வந்ததும் ஊரே சுறுசுறுப்பாகிறது. அதிகாரிகள் பறக்கிறார்கள். சாலை மின்கம்பங்கள் சரியாகின்றன. பீர்மாவோ கவர்னரைப் பார்க்கவென்றே மகனிடம் புதுத்துணி கேட்டு மகன்-மருமகளிடம் கிண்டலுக்கு ஆளாகிறார். ஆனால் யாரும் நினைக்காத நேரத்தில் பீர்மாவின் கைபிடித்துக் குலுக்கிவிட்டுச் செல்கிறார் கவர்னர். அதனால் ஊர்க்காரர்களிடம் கவர்னர் பெத்தாவாகிவிட்ட பெருமையை மீறி தனது உம்மா – வாப்பாவின் மீது கோபம் வருகிறது. பொட்டப்புள்ள படிச்சு பெரிய கவர்னராட்டா ஆகப்போறான்னு நம்மளப் படிக்கவைக்காம உட்டுட்டுதுவோஎன வைகிறார். இக்கதையின் தலைப்பாக மட்டுமின்றி இத்தொகுப்பின் தலைப்பாகவுமாகிவிட்ட கவர்னர் பெத்தா இதன்மூலம் இன்னொரு அர்த்தம் தருகிறது.

எளிய சொற்களில் உரிய காட்சிப்படுத்தலோடு மிகைப்பாடு ஏதுமின்றி இயல்பாய்ப் போகின்றன மீரான் மைதீனின் இக்கதைகள். கதை மாந்தருக்கும் வாசகருக்குமான அணுக்கமும் அதனால் எழும் பிணக்கமும் நேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆத்துனாச்சி பெத்தாவையோ ஹமீது சாகிபையோ எங்கேனும் பார்த்தால் நாலு வார்த்தை கேட்காமல் போகமாட்டேன். இக்கதைகளில் மண்ணையும் மொழியையும் மக்களையும் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. மொழி அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. நினைவோட்டங்களும் நம் மனதுக்குள் சொல்லிக் கொள்வது போலவே இருக்கின்றன. வெகு நாட்களுக்குப் பின் மனதுக்கு நெருக்கமாக உணரச் செய்த தொகுப்பு இது. மீரான் மைதீன் வாழ்த்துக்குரியவர்.

-          -  யுவபாரதி மணிகண்டன்            29/05/2017


(கவர்னர் பெத்தா – மீரான் மைதீன் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ.100/-)

May 08, 2017

கலை இலக்கியாவின் ‘பெண்மைத் தினவு’ : சொன்னாலும் தீராத சொல்

கலை இலக்கியாவின் பெண்மைத் தினவு’ : சொன்னாலும் தீராத சொல்

வீடோ நகரவிட மறுப்பது. வெளியோ சட்டகத்திற்கு உட்பட்டது. பொறுக்க முடியாமல் புலம்பும் அங்கலாய்ப்பும், பிறகு வேறு வழியின்றி கொண்டுவிடும் ஆசுவாசமுமாய் நகர்கிறது வாழ்வு.  இவ்வுலகையும் வாழ்வையும் பெண் தன்னிலை எவ்வாறு உணர்கிறது, என்ன எதிர்பார்க்கிறது, எப்படி ஆற்றாமையும் கோபமும் குற்றவுணர்வும் கொள்கிறது, அவற்றில் எதை எதை மொழிவழி வெளிப்படுத்த விழைகிறது என்பதற்கான  ஒரு சான்றாக இருக்கிறது பெண்மைத் தினவு எனும் கலை இலக்கியாவின் கவிதைத் தொகுப்பு.

1

ஆண்களின் பகல்வாழ்வு என்பது கடிகாரத்தின் மணிமுள்ளோடு மட்டும் சம்பந்தப்பட்டது என்றால், பெரும்பாலான பெண்களின் பகல்வாழ்வு என்பது  அதே கடிகாரத்தின் நொடிமுள்ளோடு சம்பந்தப்பட்டது. ஒரு நொடி கூட எங்கும் நிற்கவும் விடாமல் எதையும் நினைக்கவும் விடாமல், கையோடும் காலோடும் கட்டப்பட்ட வீட்டுக் கடமைகளோடு சம்பந்தப்பட்டது.

இரவுப் புனிதம் என்றொரு கவிதை.
நள்ளிரவின் உள்ளிருந்து
கடிகாரச் சப்தம் என்னை
விழுங்க வருகிறது

அதற்குள்
பால்வேண்டும் குழந்தை
பசியடங்கி உறங்கட்டும்

ஊளையிடும் நாய்கள்
பேசி முடிக்கட்டும்
அனாதை நிலவு ஆதரவு கொள்ளட்டும்

என்ன வேண்டுமானாலும்
இரவோடு பேசி முடியுங்கள்
சலசலக்கும் மரங்களே

விடிந்து விடுமானால்
எனது கடிகாரச் சப்தமும்
எனது கவிதை மனமும்
காலாவதியாகிவிடும்.

வீட்டை ஒட்டிய மரங்களின்  காற்றோசையை மட்டுமல்ல, தன்னை ஓயாமல் சுழலச் செய்யும் கடிகாரத்தின் சப்தத்தைக் கேட்பதும் கூட, பிள்ளையின் உறக்கத்திற்காகக் காத்திருந்து, தெருநாய்களின் ஊளையும் அடங்கிய பிறகும் எஞ்சிநிற்கும் விடியாத இரவில்தான் வாய்க்கிறது என்பதைச் சொல்கிறது இக்கவிதை.

2

ஊர்பார்த்தும் உலகம்பார்த்தும் நெளிவு சுழிவோடு நடக்க நிர்ப்பந்திக்கப்படும் இறுக்கம் ஏதும் பிள்ளைப் பருவத்தில் இருப்பதில்லை.  சமகால வாழ்வின் அழுத்தங்கள் அதிகரிக்கும் போது தம் இருப்பைச் சமன்படுத்திக் கொள்ள விழையும் மனத்தின் எதிர்வினையாகவே விளையாட என்றே விளையாடி வாழ்ந்த பிள்ளைப் பருவ நினைவுகள் மேலெழுகின்றன. அப்படி எழுந்து உலவுவது பிள்ளைப் பருவ நினைவுகளா கனவுகளா என ஐயுறும் பொழுதிலேயே, தாயாக இருக்கும் நடப்புக் கணத்தின் ஓர்மை ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது பருவ மயக்கம் எனும் கலை இலக்கியாவின் கவிதை.

ஒட்டுப்புல்லில் தும்பைப்பூச்சூடி
தலைமுடி அலங்கரிக்கிறேன்

யானையின் லத்திகளைத்
தேடித்தேடி மிதித்திருந்தும்
கால் முள்ளெடுக்க
எருக்கம்பால் தொட்டுநிற்கிறேன்

மேற்கு மலைத்தொடரைப்
பட்டப்பேர் சொல்லிக்
கதைபேசி கண் தழுவுகிறேன்

புழுதியில் கமகமக்கும்
டயர்வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது
என் வாழ்வீதியெங்கும்.

பிள்ளை வந்துவிட்டான்
“சாப்பிட்டு வீட்டுப்பாடம் எழுதுப்பா
குழந்தை எழுதத் துவங்குகிறான்

என் மேற்கு மலைத்தொடர்
கம்பளிப் புழுவெனச் சுருள்கிறது

உணரவும் முடியாமல்
உதறவும் முடியாமல்
உள்ளங்கையில் துடிதுடிக்கும்
குழந்தை இருதயங்கள்.

3

கருவுற்ற காலத்திலும் கவிதையின் மீது காதலே தன்னடையாளம் எனும் உயிர்மூச்சைத் தக்கவைத்திருக்கிறது என்றுணரும் பெண்ணுக்குத் தன் குழந்தையைப் பார்க்கும் போது எழும் குற்றவுணர்வைக் காட்டுகிறது சாபம் படிந்த கவிதைகள்  எனும் ஒரு கவிதை.

கட்டிலுக்கு அடியிலான
விடிவிளக்கின் வெளிச்சத்தில்
கர்ப்ப வயிறு அழுந்த அழுந்த
நான் எழுதிய கவிதைகள்
என் உயிர்மூச்சைத் திருடி
பாதுகாத்து வைத்தன

அதன் மேல்
ஒட்டிய உடலோடிருக்கும்
எனது பிள்ளையின்
சாபங்கள் படிந்து கிடக்கின்றன.

4

மக்களின் பேச்சு மொழியிலேயே அமைந்து பெண்களின் உணர்வுகளைப் பேசும் பல கவிதைகள் கலை இலக்கியாவின் இத்தொகுப்பில் உள்ளன. சமஞ்சா அடங்காதாபக்தி, உரையாடல், மூக்குத்தி ஆகிய கவிதைகள் இவற்றில் குறிப்பிடத் தக்கவை எனலாம்.
கணவனாலும் பிழைப்பாலும் தினசரி வாழ்வே போராட்டமும் புலம்பலுமாக நகரும் ஒரு தாய், உயிர் மாய்த்துக் கொள்ள மாட்டாமல் தொடர்ந்து வாழத் தான் கொண்டுள்ள ஒரே நம்பிக்கையான தன் மகளைச் சுட்டி, கணவனையும் சாதிசனத்தையும் பற்றி அங்கலாய்க்கும் கவிதை சமஞ்சா அடங்காதா?
இந்தக் காட்டுமாட்டுப் பயகிட்ட
கருமாயப்படுறதுக்கு – நாந்
தீயப் பொருத்திக்கிட்டா செத்த சொகமாயிருக்கும்

என்னப் பெத்த சனம் பீதின்னிப்பய சனம்
இந்தத் துரியோதனங் கையில விட்டுத்
தலமுழுகுன கெட்ட சனம்

ஒரு மொழக் கயித்துக்கும் வழியில்ல
உசிரு வாழவும் ஒணச்சியில்ல

கங்கணம் கட்டிக்கிட்டு – எங்
கொலையக் கொதிக்கவிட்டு
மூதேவி முண்ட என்ன
உசிரோட அடிக்கையில

நாம் பெத்த ராசாத்தி
இந்த ஒத்தப் பொட்ட சமஞ்சா
என் நெத்தம் கடவாயில ஒழுக

பயமுறுத்தும் இந்த சனம்
பதமா மாறாதா – மனுசத்
திமிறுதேன் அடங்காதா?

5

இரு வேறு கொடுமைகளை ஒரு சேரச் சொல்கிற கவிதை உரையாடல். நேற்று முன்தினம் குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரி என்றாலும் இன்று வழக்கமான பிழைப்பான களையெடுக்க வந்து விடுகிறார் விவசாயக் கூலியான ஒரு பெண். பெற்ற குழந்தையும் பெண் குழந்தை. அதுக்குள்ளே பிழைப்புக்கு வந்துட்டியேஎன்பவர்கள் பற்றி அப்பெண் இயல்பாகச் சொல்வது போல் பேசுகிற கவிதை இது.
பொழப்பே எழவெடுத்த பய
பொழப்பாப் போச்சு
பொறந்த வீட்டுலதேஞ் சீரழிவுன்னா
போன எடத்துலயும் வாதனதேன்

பெத்தவனும் கட்டுனவனும்
பந்தாட்டம் ஆடுனா
பொட்டச்சிப் பொழப்பு காத்துப்புழுதிதேன

என்னத்தச் சொல்ல?
என்னிக்குத்தெ எம்பாடு தீருமோ
இல்ல – மண்டையோடதேம் போகுமோ?

“ஏக்கா மயிலக்கா
இத்தினின்டு ஊறுகா குடு
ஏண்டி முந்தாநாளு பெத்தியே
இன்னிக்கு எங்கடிங்குறாளுக
இவளுக யோக்கியம் மாதிரி

பொட்டயக் கொண்டுபுட்டுதே
களையெடுக்க வந்தேன்”

“ம்... போதும் போதும்
ஊறுகால்லாம்
தொட்டுச் சாப்புடக் கூடாது
பாத்துக்கிட்டே தின்னுறனும்
அம்புட்டு வசதியிலயா நாம இருக்கோம்.”

6

ஆற்றாமையும் ஆதங்கமும் துயரமும் சீற்றமும் பெருகிய வாழ்விலேதான் நெகிழ்வான கணங்களும் இருக்கின்றன. கவிதையின் மீது கொண்ட நம்பிக்கையாலேயே அக்கணங்களை மொழிப்படுத்தவும் சாத்தியமாகிறது. அதில் ஒரு கணமாக நதிவேர் எனும் கலை இலக்கியாவின் கவிதை காட்டும் காட்சி அபாரமானது.
ஒரு மழைத்துளியைக்
கையில் ஏந்தியபடி ஒரு
மல்லிகைப் பூவின் பின்னே
நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்

பனித்துளிக்கு உள்ளெ ஒதுங்கிய
சூரியச் சுடராய்ச் சுடர்கிறது மல்லிகை
தூரத்து மலையருவியில்
வெயில் உருகி வழிகிறது

ஆற்றுமீனை அடித்துக் கோர்த்து
சுட்டுத்தின்ற வடுவுடைய கம்பியால்
ஆற்றைப் பிளக்கிறேன் ஒரு
நதியை நட்டுவைக்க

ஒரு மல்லிகைப் பூவின் உள்ளே
நதி வேர் விட்டு விழுது பரப்புகிறது
அந்தரத்தில் பாயும் நதியாக.

இன்னும் பல நல்ல கவிதைகளைக் கலை இலக்கியா தருவார் என்று நம்பிக்கை தருகிறது பெண்மைத் தினவு’.


(07/05/2017 அன்று தேனியில் முற்போக்கு கலை இலக்கிய மேடை ஏற்பாடு  செய்திருந்த கூட்டத்தில் கலை இலக்கியாவின் பெண்மைத் தினவு எனும் கவிதைத் தொகுப்பைப் பற்றிப் பேசியது.)